People's Watch in Media
...
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட 17 அதிகாரிகளும் பதிலளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இணைத்து மனுத்தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள காவல்துறை, மாவட்ட ஆட்சியர், வருவாய் துறை அதிகாரிகளை இந்த வழக்கில் இணைத்து ஹென்றி திபேன் தரப்பில் நேற்று கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு, சம்பந்தப்பட்ட 17 அதிகாரிகளும் பதிலளிக்கும் வகையில், நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை வரும் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகளின் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு, பதவி உயர்வு வழங்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இவ்வழக்கில் சேர்த்து மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர். நீதிமன்ற உத்தரவின்படி, ஆணையத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட போலீசார், கலெக்டர், வருவாய் துறை அதிகாரிகளை, வழக்கில் இணைத்து, கூடுதல் மனுவை ஹென்றி திபேன் தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அமர்வு, மனுவில் குறிப்பிட்டுள்ள, 17 அதிகாரி களும் பதில் அளிக்க, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டது. விசாரணையை, வரும் 21க்கு தள்ளி வைத்தது.
...
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எஸ். சுந்தர், நீதிபதி செந்தில்குமார் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி. எஸ். இராமன் ஆஜராகி, துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்ட 17 காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 தாசில்தார்களுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பவது இந்த தருணத்தில் தேவையில்லை என்று வாதிட்டார். மேற்சொன்ன நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நாங்கள் தான் முடிவு செய்தோம் என நீதிபதிகள் தெரிவித்தபோது, நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கை இப்போது வரை தமிழ்நாடு சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் வரவிருக்கின்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். இது உண்மைக்குப் புறம்பானது. ஏனெனில் கடந்த 18 அக்டோபர் 2022 அன்று அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை தமிழ்நாடு சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் விளைவாக ஆணையிடப்பட்டு அதிகாரிகளின் குற்றங்கள் உறுதி செய்யப்பட்டு, அதற்கான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த தகவல் தமிழ்நாட்டில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆகவே அரசுத் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர் வேதாந்தா (ஸ்டெர்லைட்) குழுமத்தின் வழக்குகளில் ஆஜாராகாத வழக்கறிஞராக இருந்தால் சிறப்பு என்று மனுதாரர் வழக்கறிஞர் ஹென்றி திபேன் தனது கருத்தைப் பதிவு செய்தார். வழக்கு பிப்ரவரி 21 மீண்டும் விசாரணைக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.