பெருகும் குற்றங்கள்... சறுக்கும் காவல்துறை...
என்ன செய்யப் போகிறார் முதல்வர்?
"காவல்துறை யாருக்குமே பதில் சொல்ல அவசியமில்லாத சூழல் இங்கே உருவாகிவிட்டது. முதல்வரின் பொறுப்பில் இருக்கிறது காவல்துறை. இந்த நான்காண்டுகளில் எத்தனையோ நிறுவனங்களில் அவர் ஆய்வு செய்திருக்கிறார். காவல் துறையில் ஆய்வு செய்திருக்கிறாரா..?" என்று கேள்வியெழுப்புகிறார் மனித உரிமைச் செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான ஹென்றி டி.பேன்.
"காவல்துறையில் பணிபுரிபவர்களைக் கேள்வி கேட்கக்கூடிய நிலையில் உயர் அதிகாரிகளும் இல்லை. முதலமைச்சரும் இல்லை. நீதித்துறையும் அமைதியாக இருக்கிறது. பத்திரிகைகளில் வருகிற செய்திகளை நீதிபதிகள் பார்க்கிறார்களா? மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படும்போது தானாகவே முன்வந்து நீதிமன்றம் தலையிட வேண்டும்.
ஸ்டெர்லைட் சம்பவத்தில் போலீஸ் அத்துமீறல் நடந்தபோது, மாஜிஸ்ட்ரேட் களத்தில் இறங்கினார். ஒவ்வொரு காவல் நிலையமாகப் போய் ஆய்வுசெய்து சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டவர்களை விடுவிக்கச் செய்தார். 2020-ல் ஒரு காவல் நிலைய மரணம். இறந்த பையனின் அப்பாவிடம் பேசி வழக்கை முடித்துவிட்டார்கள். உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் கவனத்துக்கு அதைக் கொண்டு சென்றபிறகு வழக்கு தூசி தட்டப்பட்டு இப்போது ஏழு காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு நிலுவையில் இருக்கிறது. இப்படி, நிறைய முன்னுதாரணங்கள் உள்ளன. முதலமைச்சரும் உயரதிகாரிகளும் மௌனம் சாதிக்கும்போது
நம்முன் இருக்கும் நம்பிக்கை நீதிமன்றங்கள் தான்" என்கிறார் ஹென்றி டிபேன்.
