காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் வாக்குமூலங்கள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.
சென்னையில் சமீபத்தில் நிகழ்ந்த விக்னேஷ் என்ற இளைஞரின் லாக்அப் மரணம் தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள் ஆகியோரின் வாக்குமூலங்களைக் காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சென்னையில் இன்று வெளியிட்டது.
ஏப்ரல் 18ஆம் தேதி இரவு 11 மணியளவில், வி விக்னேஷ் (வயது 23) மற்றும் அவரது நண்பர்களும் (ஆட்டோ ஓட்டுநர் பிரபு மற்றும் சுரேஷ்) சென்னை நகரின் கெல்லிஸ் பகுதிக்கு அருகே போதைப்பொருள் (கஞ்சா மற்றும் பட்டாக்கத்தி) வைத்திருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டனர். ஒரு நாள் கழித்து சென்னையில் உள்ள காவல்நிலையத்தில் 23 வயது இளைஞன் தாக்கப்பட்டு இறந்ததாக தகவல் வெளியானது. ஒரு வாரத்திற்குப் பிறகு, இந்த வழக்கில் அமைதியாக இருக்க காவல்துறை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ 1 லட்சம் வழங்கியதாக அவரது சகோதரர் கூறுகிறார்.